Tuesday, January 19, 2010

அன்பு

உலகில் பலவிதமான அன்பைப் பார்க்கிநோம். நட்பு, பாசம், காதல், கருணை, பக்தி என அன்பின் பரிமாணங்கள் எக்கச்சக்கம். ஆனால் இவ் விதங்கள் எல்லாம் புறத்திலேயே ஒழிய அடிப்படையாய் இருப்பது அன்பு என்ற ஒரே உணர்வாகும். ஆனால் நாம் அன்றாடம் காணும் பல 'அன்பு'கள் முழுமையானவையல்ல. அன்பிற்குச் சில அடிப்படை வரைவிலக்கணங்கள் உள்ளன.
அன்பு எதையும் எதிர்பாராதது. இந்த ஒன்றிலேயே பல அன்புகள் தட்டுப்படும். அதில் தேறியவைதான் உண்மையான அன்புகள். ஆனால் அவற்றிலும் பல தரங்கள் உள்ளன. தனிப்பட்ட மனிதர் மீதான நேசம் முதல் பிரபஞ்சம் முழுவதும் தழுவிய அன்பு வரை காண முடியும். காதல் முதல் பக்திவரை அவை காணப்படுகின்றன.

நட்பு
இது பழகப்பழக வருவது. ஆரம்பக் கட்டத்தில் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் இதுவும் எதிர்பார்ப்பில்லாத் தூய நிலை அடையும் தகுதி உடையதே. ஆனால் இக்காலத்தில் உணர்வுபூர்வமான நட்புகள் அரிது.

பாசம்
இது பந்தத்தை அடிப்படையாய்க் கொண்டது.

காதல்
காதலில் பின்வரும் நிலைகள் உள்ளன:
1- உடல்ரீதியானது- காமத்தை அடிப்படையாய்க் கொண்டது. இது உடல் அழகைப் பார்த்து வருவது.
2- மனோரீதியானது- பரஸ்பர உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மனம் ஒத்துப்போவதால் வருவது. இங்கு பதில் அன்பு எதிர்பார்க்கப்படுகிறது.
3- உணர்வுரீதியானது- இது தூய அன்பு. அன்பு செலுத்துவதை மட்டுமே இக் காதல் அறியும்.
இங்கு முதலிரு வகைக் காதலும் அன்பெனும் வரையறையுள் அடங்காதவை. மூன்றாவது அன்பானாலும் தனி மனித வட்டத்துள் குறுகி நிற்கிறது. ஆனால் இதுவும் விரிந்து பிரபஞ்சம் தழுவியதாகலாம். அதாவது காண்பதெல்லாம் காதலனாய்த் தோன்றினால் அதுவன்றோ ஞானம்!

கருணை
இதில் எதிர்பார்ப்பு இருப்பதில்லை என்றே சொல்லலாம். பேதமின்றிப் பெருகும் தூய அன்பு.

பக்தி
உண்மையில் பக்தி என்பது பக்திக்காகவே பக்தி செய்யும் தூய நிலை. ஆனால் பல வேண்டுதல்களோடு வரும் பக்தியும் உள்ளதை நாம் அறிவோம். தூய பக்தி நிலை அனைத்து அன்பு வகைகளையும் வென்றது. உச்ச அன்பு நிலை இங்குதான் அடையப்படுகிறது.
அன்புக்கு இலக்கணமாய்த் திகழ்பவர் தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார். அவர் அன்பைப் பற்றி என்ன சொல்கிறார்? :- "நீ மனிதர்கள் யாரிடமாவது அன்பு செலுத்துவாயானால் அதற்காக நீ துன்பப்பட்டே ஆகவேண்டும். எவன் ஒருவன் கடவுளை மட்டுமே நேசிக்கிறானோ அவனே பாக்கியவான்.இறைவனிடம் அன்பு செலுத்துவதால் துன்பமே இல்லை. எப்பொழுதும் மற்றவர்களுக்கான உன் கடமைகளைச் செய்துகொண்டிரு. ஆனால் கடவுளிடம் மட்டும் அன்பு செலுத்து. உலக அன்பு சொல்லொணாத் துன்பத்தையே தரவல்லது. "

No comments:

Post a Comment