Sunday, April 25, 2010

விழிப்பு, கனவு, தூக்கம்

விழிப்பு என்பது ஸ்தூல உடலில் ஜீவன் பெறும் வாழ்க்கை. கனவு என்பது சூட்சும உடலில் ஜீவன் அடையும் வாழ்க்கை. தூக்கம் என்பது, காரண உடலில் ஜீவன் இருக்கும் வாழ்வு. இந்த மூன்று நிலையிலும் மற்ற இரண்டும் இல்லை. ஜீவனோ மூன்று நிலையிலும் இருப்பது. -சாந்தோக்கிய உபநிடதம் (8-7-12)-

இந்த சுலோகம் பற்றிய விளக்கம் யாருக்காவது இருந்தால் தெரிவியுங்கள்.

எமது கருத்து:

வேதங்களில் கூறப்பட்ட 5 கோசங்களில் (ஆன்மாவைச் சூழ்ந்துள்ள 5 உறைகளில்)
முதலாவது உறையான 'ஆனந்தமய கோசம்' / 'அஹங்காரம்' காரண சரீரம் என அழைக்கப் படும். ஏனெனில் ஜீவாத்மாவானது பரமாத்மாவினின்று வேறாய் இருப்பதற்கு அஹங்காரமே காரணம்.
2ஆவது உறையான 'விஞ்ஞானமய கோசம்' / புத்தி, 3ஆவது உறையான 'மனோமய கோசம்' / மனம், 4ஆவது உறையான 'பிராணமய கோசம்' / பிராணன் ஆகியன சூட்சும சரீரம் என அழைக்கப் படும். ஏனெனில் அவை கண்ணுக்குத் தெரியாதவை.
5ஆவது உறையான 'அன்னமய கோசம்' / உடல் ஸ்தூல சரீரம் என அழைக்கப்படும். ஏனெனில் அது பிரத்தியட்சமாகத் தெரிவது.

விழிப்பு என்று இங்கு கூறுவது உடல் விழிப்பாய் இருப்பதையே எனக் கருதவேண்டியுள்ளது. இங்கு அனைவரும் அறிந்தது போல் விழிப்பு நிலையில் உடல் மூலமே வாழ்கிறோம். எனவே விழிப்பு என்பது ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அடையும் வாழ்வு.

கனவு என்பது எமக்குத் தெரியும்... பல காட்சிகள் எம் கட்டுப்பாடின்றி ஓடிக்கொண்டிருக்கும். ஆய்வின் படி சராசரி மனிதன் தினமும் 4 கனவுகள் காண்பதாகத் தெரிவிக்கப் படுகிறது. கனவு காணும்போது யாருக்கும் அது கனவு என்பது தெரியாது. அது உண்மை என்றே நினைக்கிறோம். கனவில் ஓடினால்கூட நெஞ்சம் படபடக்கிறது! எனவே அங்கு நாம் வாழ்கிறோம். இது பற்றி ஒரு சுவையான கதைகூட எம்மவரிடையே வழக்கிலுண்டு. கனவில் காட்சிகளாய் ஓடுபவை மனதில் அல்லது சித்தத்தில் (மனதின் ஒரு பகுதி like memory chip) பதிந்துள்ள விடயங்கள் தொடர்பானவை. எனவே இது (கனவு) சூட்சும சரீரம் மூலம் பெறும் வாழ்க்கை.

தூக்கம் என்று இங்கு குறிப்பிடுவது எமது மொழியில் 'ஆழ்ந்த உறக்கம்'(அதாவது கனவுகள் இல்லாத உறக்கம்). சராசரி மனிதன் தினமும் 1/2 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சில வேளைகளில் சிலர் 'படுத்துக் கண்ணை மூடியவுடனே விடிந்து விட்டதாக அம்மா எழுப்பினார்! எப்படி இரவு கழிந்ததென்றே தெரியாது!' எனக் கூறியிருக்கின்றனர். அது ஒருவேளை நீண்ட நேர ஆழ்ந்தஉறக்கமாய் இருக்கலாம். கனவுகளே இல்லாத நித்திரை கொள்பவர் ஒருவரையும் நாம் சந்தித்திருக்கிறோம். அவருக்குள்ள நினைவின் படி அவர் இறுதியாகக் கனவு கண்டு 30 வருடங்களுக்குமேல் ஆகிறது! ஆழ்ந்த நித்திரை மனதிற்குப் புத்துணர்ச்சியையும் தெளிவையும் ஒரு வித அமைதியையும் தருகிறது. ஏனென்றால் இந்த 'தூக்க'த்தின் போது மட்டுமே மனம் ஓய்வெடுக்கிறது. அலைகளில்லாத குளத்தில் அடி நிலத்தைத் தெளிவாய்க் காணலாம். அதுபோல் எண்ணங்கள் அற்ற மனதினூடாக ஆன்மாவின் ஒளி எளிதாக ஊடுருவுகிறது. அதுவே மேற்கண்ட புத்துணர்ச்சிக்கும், அமைதிக்கும் காரணம். ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் ஒரே ஒரு உணர்வு நிலைக்கிறது. அதுவே 'நான்' என்ற உணர்வு. அதாவது 'அஹங்காரம்' (அஹம் = நான், காரம் = உச்சரிப்பு => நான் என்ற உச்சரிப்பு) நிலைக்கிறது. எனவேதான் தூக்கம் என்பது காரண சரீரத்தில் ஜீவன் அடையும் வாழ்க்கை எனப்படுகிறது.

//இந்த மூன்று நிலையிலும் மற்ற இரண்டும் இல்லை//

விழிப்பாய் இருப்பவன் கனவு காண்பதில்லை, கனவு காண்பவன் விழிப்பாய் இருப்பதில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டதே தூக்கம். எனவே தூக்கத்தில் மற்ற இரண்டும் இல்லை. அதே நேரம் விழிப்பாக அல்லது கனவு காணும் போது 'நான் காண்கிறேன்' என்ற எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. வெறுமனே 'பார்க்கிறேன், செய்கிறேன்' என்றே எண்ணுகிறோம். அங்கு (சாதாரண மனிதருக்கு) 'நான்' உணர்வு விழிப்படைவதில்லை. ஆகவே அந்த மூன்று நிலையிலும் மற்ற இரண்டும் இல்லை.

//ஜீவனோ மூன்று நிலையிலும் இருப்பது//

ஜீவன் இல்லாவிட்டால் உடல் பிணமாகிவிடும். எனவே விழிப்பில் ஜீவன் உள்ளது.
கனவு கண்டு விழித்தவனிடம் 'கனவிலே உன் வீடு இருந்ததா? உன் நண்பன் இருந்தானா?' என்று கேட்டால் ஆம் என்றோ இல்லை என்றோ பதில் வரும். சில கனவுகளில் சிலர் இருப்பர் வேறு சிலதில் வேறு சிலர் இருப்பர். ஆனால் 'எல்லாக் கனவலும் நீ இருந்தாயா?' என்று கேட்டால் 'ஆமாம் நடப்பதையெல்லாம் நான்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்' என்றுதான் பதில் வரும். எனவே கனவில் ஜீவன் இருந்திருக்கிறது.
ஆழ்ந்த நித்திரையில் ஜீவன் இருக்கிறது. ஆனால் அதை நிறுவ எமக்குத் தெரியாது. ஏனென்றால் ஆழ்ந்த நித்திரையில் என்ன நடந்தது என்பது விழிப்பு நிலையில் தெரியாது. ஆனால் ஒரு விடயம்: ஆழ்ந்தநித்திரை என்பது 'நான் உணர்வா'ல் வருவது. 'நான் உணர்வு'தான் ஜீவாத்மாவைப் பரமாத்மாவிலிருந்து பிரிப்பது. எனவே அங்கு ஜீவன் இருக்கிறது என உய்த்தறியலாம். ஜீவன் இல்லாமல் கோசங்கள் இல்லை. கோசங்கள் இல்லாமல் விழிப்பு, கனவு, தூக்கம் எதுவுமில்லை. ஆகவே இந்த மூன்றிலும் ஜீவன் இருக்கிறது.

இச் சுலோகத்தை மூல நூலில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதிலுள்ள விளக்கம் தெரியவில்லை. யாருக்காவது அது தெரிந்திருந்தால் அல்லது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். இச் சுலோகம் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற அது எமக்கு உதவும்.

2 comments:

  1. நான் உணர்வு என்றால் என்ன?

    ReplyDelete
  2. நாம் எம்மையும் பிறரையும் பிரித்தே பார்க்கிறோம். அவ்வாறு பிரித்துப் பார்க்க வைக்கும் உணர்வே நான் உணர்வு.
    சாதாரணமாக //'நான் நான் செய்கிறேன்' என்ற எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. வெறுமனே 'செய்கிறேன்' என்றே எண்ணுகிறோம்.// தன்னுணர்வுடன் செய்யும் செயல்களே சிறந்தவை. முடிந்தால் அவற்றைப் பற்றியும் ஒரு பதிவிடுகிறேன்.

    ReplyDelete